வாரணம் ஆயிரம் - ஒரு திறந்த விமர்சனம்


பதிவை அச்செடு பதிவை அச்செடு

வாரணம் ஆயிரம் படம் பற்றிய இணையக் குழுக்களின் கருத்துக்களை பார்த்தேன். ஆனால் ஒரு நல்ல விஷயம், அந்த விமர்சனங்களை படிக்கும் முன்னரே நான் படத்தைப் பார்த்துவிட்டேன். இதனால் என்ன நல்ல விஷயம் என்றால் படத்திலிருந்த அபத்தங்களை விரிவாக காண்பித்த அதே சமயம் சில அற்புதங்களை அவர்கள் விட்டுவிட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வரும் அளவிற்கு படம் நல்ல படமாக அமைந்தது. இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம் எந்தப் படத்தையும் பார்க்கும் முன்னர் சில விமர்சனங்களை படித்துவிடும் பழக்கம் உள்ள நான் இனிமேல் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்ததுதான். ஒரு வேளை தசாவதாரமும் எனக்கு பிடிக்காமலே போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாம் விமர்சனங்களை படித்துவிட்டு பின் படம் பார்க்கும்போது அந்தந்த விமர்சகர்களின் கருத்துக்கள் நம் மனதில் அடிக்கடி தலைகாட்டி படத்தை நமக்கு பிடித்த வகையில் பார்க்க இயலாமலேயே போய்விடுகின்றது.

இந்த விமர்சனத்தையும் படம் பார்த்தவர்கள் மட்டுமே படிக்கும்படி (அவர்களுடைய நல்லதுக்காகத்தான்) வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன். எனக்கு பிடித்த நான் இரசித்த வரையிலேயே இந்த விமர்சனம் அமைந்திருப்பதால் உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையெனில் தயவு செய்து அதைப் பற்றி பேச வேண்டாம்.

தமிழ் சினிமாக்களை மட்டும் என்று இல்லை, உலக சினிமா அனைத்திலுமே நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், சினிமா என்று வந்துவிட்டால் லாஜிக்குகள் என்று கூறப்படம் அர்த்தங்களை நாம் அதிகம் கவனிக்கக்கூடாது. சினிமா என்பதே ஒரு பேன்டசிதான். பேய்ரி டேல் (Fairy Tale) என்று கதைகளில் ஒரு பிரிவு உண்டு. இது நாம் சின்ன வயதிலிருந்து அம்மா, பாட்டி, அப்பா, ஆசிரியர் என்று பலரிடம் கேட்ட கதைகள்தான். ஆனால் அதில் எந்தக் கதையிலும் அபத்தங்கள் இல்லாமல் இருந்ததில்லை. இருப்பினும் நம்மால் அந்தக் கதைகளை மறக்கவோ இரசிக்காமலோ இருக்க முடியாது. அதற்கு காரணம் அந்தக் கதை நம்மில் ஏற்படுத்தும் பாதிப்புதான். சின்ன வயதிலேயே சில நல்ல விஷயங்களை இது போன்ற சுவாரசியமான கதைகளில் புகுத்தி நமக்கு ஊட்டிவிடுவதால்தான் இன்னமும் பலர் நல்லவர்களாகவே இருக்கின்றோம். அதுபோலவேதான் பேன்டசியும். அதில் அர்த்தங்களை தேடிக்கொண்டிருப்பதைவிட அனுபவித்தல்தான் சுகம். இதைப் புரிந்துகொள்ள எனக்கும் மிகவும் வருஷங்களாகிவிட்டது. ஒவ்வொரு படத்திலும் அபத்தங்களை தேடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு அனுபவித்து பார்க்கும் பழக்கத்தை நான் ஏற்படுத்திக்கொண்டது மிகவும் நல்லதாக முடிந்தது எனக்கு. இதில் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் இருந்தாலும் எனக்கென்னவோ இதுதான் பிடித்திருக்கின்றது. இனி விமர்சனத்திற்கு…

கெளதம் மேனன் தன்னுடைய அப்பாவின் நினைவாக இயக்கியிருக்கும் படம்தான் வாரணம் ஆயிரம். ‘வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்…’ என்கிற ஆண்டாள் பாட்டிலிருந்துதான் படத்தின் தலைப்பு. ஆண்டாள் தனது காதலனாகிய ஸ்ரீமன் நாராயணன் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள ஆயிரம் யானைகள் சூழ ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரை வலம் செய்து வர அவரை ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வாரும் மக்களும் வரவேற்க பூரண கும்பத்துடன் நிற்பதுபோல தான் கண்ட கனவை தோழிக்கு ஆண்டாள் கூறுவது போலிருக்கும் இந்தப் பாடலின் தலைப்பு படத்திற்கு மிகப் பொருத்தம் என்றுதான் எனக்குத் தோன்றியது. இதில் வாரணம் ஆயிரம் சூழ வலம் வருபவர் சூர்யாவின் அப்பா கிருஷ்ணன். சூர்யாவும்தான் என்று படத்தின் இறுதிக்காட்சியில் சிம்ரன் கூறுவார். இரண்டு பேருமே அவரவர் மனைவிக்கு அரங்கனைப் போலிருந்தாலும் படத்தின் கதை மகன் சூர்யாவைச் சுற்றியே வருகின்றது. அப்பா சூர்யா கதையின் பிரதான நாயகனாக இருந்தாலும் அவரையும் மகனின் பார்வையிலிருந்து காட்டுவதின் மூலம் மகன்தான் பிரதான நாயகன் என்று உணர்த்தியிருக்கின்றார் இயக்குநர். இனி கதைக்கு…

வயதான அப்பா கிருஷ்ணனிடமிருந்து ஆரம்பிக்கின்றது கதை. முடி திருத்தம் செய்யப் போன சூர்யா திரும்ப வந்து குளியலறையில் இரத்த வாந்தி எடுக்க டாக்டர்கள் தாம் முன்னமே கூறியபடியான நிலைக்கு வந்துவிட்டதாக கைவிரிக்க தன் மகன் பெயரான சூர்யாவை சொல்லிவிட்டு சிரித்தபடியே உயிர்விடுகின்றார். அதே நேரம் இந்திய இராணுவத்தின் ஒரு முக்கியமான கடமைக்காக ஹெலிகாப்டரில் சக இராணுவ வீரர்களுடன் பயனித்துக்கொண்டிருக்கின்றார் மேஜர் சூர்யா. தொலைபேசியில் தன் தந்தை உயிர்விட்ட சேதியறிந்து மேற்கொண்டிருக்கும் கடமையை முன்னிட்டு பொறுத்துக்கொண்டு இருந்துவிடும் மேஜர் சூர்யா அமைதியாக இருந்தாலும் அவருள் இருக்கும் மகன் சூர்யா தன் அப்பாவைத் தேடி அலைய அவருடைய பார்வையில் விரிகின்றது படத்தின் கதை.

ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் அரவணைப்பு என்றால் தந்தைதான் கதாநாயகன் என்று ஆரம்பிக்கின்றது கதை. தன்னுடைய அப்பாவும் அம்மாவும் கொண்ட காதலையே தனக்கும் இன்ஸ்பிரேஷனாக ஏற்றுக்கொள்ளும் சூர்யாவின் வாழ்க்கையில் அவருடைய பெற்றோர் வகிக்கும் மாபெரும் பங்குதான் கதை என்றாலும் கதை மகன் சூர்யாவை சுற்றித்தான் சுழலுகின்றது. அப்பா கிருஷ்ணன் அம்மா மாலினியை சந்தித்து காதலித்ததை அம்மா மாலினி சொல்லக் கேட்கின்றார் மகன் சூர்யா. தன் தந்தையை தனது கதாநாயகனாக வைத்திருக்கும் மகன் தன்னுடைய வாழ்க்கையின் எந்தவொரு கட்டத்திலும் அப்பாவையே உதாரண புருஷராக எடுத்துக்கொள்கின்றார். ஒழுங்காக படிக்காமல் எல்லா மகன்களையும் போல தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை வீணடிக்கும் சூர்யாவுக்கு ஒரு இரயில் பயணத்தின்போது ஏற்படும் சந்திப்பு தன்னுடைய அம்மாவை அப்பா சந்தித்த அந்த காதலான நினைவுகளை கொண்டுவந்து அந்தப் பெண்ணுடன் பார்த்ததும் காதலில் வீழ்கின்றார். ஆனால் இப்படி பார்த்தவுடன் காதலில் நம்பிக்கையில்லாமல் அந்தப் பெண் (சமீரா ரெட்டி) தவிர்க்கப் பார்க்கும்போது தன்னுடைய தாயை தன் தந்தை எப்படி முழுதும் அள்ளிக்கொண்டு போனாரோ அதுபோலவே அந்தப் பெண்ணையும் தன்னுடைய காதலால் முழுதும் அள்ளிக்கொண்டு போவேன் என்று உறுதிகொள்ளும் சூா்யா ஒரு வாரம் கழித்து அவளை வீட்டில் சந்திக்கின்றார். இன்னமும் இவர் ஞாபகம் வைத்திருந்ததே ஆச்சரியப்படுத்தினாலும் இன்னமும் முழு நம்பிக்கை வந்துவிடாத சமீரா அமெரிக்காவுக்கான தன்னுடைய பயணத்தைப் பற்றிக் கூற வேறு வழியின்றி வீடுதிரும்பும் சூர்யா அமெரிக்கா செல்ல முடிவெடுக்கும் அதே நேரம் அப்பா மைல்ட் ஹார்ட் அட்டாக்கில் படுத்த படுக்கையாக, காதல் கனவுகள் என்று எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு பொறுப்பான பிள்ளையாக வேலை செய்தும் தன்னுடைய கித்தார் இசைத் திறமையை வைத்தும் சம்பாதித்து அப்பா தொடங்கிய வீட்டை கட்டி கடன்களை அடைத்து நல்ல நிலைக்கு வருகின்றார் மகன் சூர்யா. அதன்பின் அப்பா அம்மாவின் ஆசீர்வாதத்துடன் அமெரிக்காவுக்கு விசா எடுத்து காதலியைத் தேடி விரைகின்றார். அமெரிக்காவில் காதலியை சந்திக்க ஆச்சரியத்தில் அவரின் காதலின் ஆழம் அறிகின்றார் காதலி. பிறகு மெல்ல மெல்ல அவருக்கு இவரின் மேல் காதல் வர அதன்பிறகு எல்லாம் சுபமாக முடியப்போகின்றது என்கிற எதிர்பார்ப்பிலிருக்கும்போது எதிர்பாராவிதமாக நிகழும் ஒரு குண்டு வெடிப்பில் உயிர் துறக்கின்றார் காதலி சமீரா ரெட்டி.

தந்தையைப் போல தன் காதல் வாழ்வும் ஆனந்தத்தில் முடியாத வெறுப்பும் காதலியை இழந்த துக்கமும் சூர்யாவை சுழலடிக்க எல்லாவித தீய பழக்கத்திற்கும் அடிமையாகும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றும் பெற்றோர் அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவரையே உணர்ந்துகொள்ள வேண்டி தனியாக காஷ்மீர் அனுப்புகின்றனர். காஷ்மீரில் தன்னை தேடி அலையும் சூர்யா இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலிருந்து காதலி இறந்த சோகத்தில் வந்தபோது விமானத்தில் சந்தித்த அற்புத மனிதர் ஒருவரின் அன்புப் பிள்ளையை யாரோ கடத்திவிட்டதை அறிந்து அவரிருக்கும் டெல்லிக்கு சென்று தன்னுடைய சொந்த முயற்சியால் கஷ்டப்பட்டு அந்த மனிதரின் மகனை மீட்கின்றார். அதன்பிறகு பெற்றோரிடம் திரும்பும் சூர்யா தன்னுடைய சின்னவயதிலிருந்து இருந்த இராணுவ ஆர்வத்தை மையப்படுத்தி இப்போது இராணுவத்தில் சேர விரும்பம் தெரிவிக்க வேறு வழியின்றி மகனின் ஆசைக்கு ஒப்புதல் அளிக்கின்றனர் பெற்றோர். அதன்பிறகு இழந்துபோன காதல் எப்படி அவருக்கு தங்கையின் தோழி உருவத்தில் மறுபடியும் கிடைத்தது, அவர் மேற்கொண்ட இராணுவ கடமை என்ன ஆயிற்று என்று விடைசொல்லி முடிக்கின்றது படம்.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் பார்ப்பவர்கள் அப்பா சூர்யாவை சுற்றி இருப்பதாக எண்ணிக்கொண்டு மேலும் பார்க்க அது மகன் சூர்யாவை சுற்றி வரும்போது கண்டிப்பாக ஏமாற்றமும் கதை எங்கே போகின்றது என்கிற வெறுப்பும் ஏற்படுவது இயல்பு. ஆனால் அது மகன் சூர்யாவை சுற்றி இருப்பதை புரிந்துகொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் கதையும் கோர்வையாக புரிகின்றது. சூர்யாவின் கடின உழைப்பை கண்டிப்பாக நான் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு பிரேமுக்கும் உருவம் மாறும் அவர் காட்சிகளின் தேவைக்கு ஏற்ப தன்னுடைய உடலமைப்பையும் மேனரிசங்களையும் மாற்றிக்கொள்வது அற்புதம். மிகச்சிறந்த கலைஞன் தான் என்பதை சூர்யா மறுபடியும் நிரூபித்திருக்கின்றார். அதிலும் 20 வயது இளைஞனின் தோற்றமும் இராணுவ வீரரின் தோற்றமும் வயதான அப்பா தோற்றமும் அவர் கண்டிப்பாக மிகவும் கஷ்டப்பட்டு செய்திருப்பது தெரிகின்றது. இந்தப் படம் சூர்யாவுக்கு ஒரு மைல்கல். இராணுவ வீரனாக வரும் சூர்யாவின் உடம்பும் கம்பீரமும் நாமும் இராணுவத்தில் சோ்ந்தால் என்ன என்று தோண வைப்பது அருமை.

இளமையாக வரும் சிம்ரன் ஆச்சரியம். அதேசமயம் முதுமையாக வரும் சிம்ரனை ஏனோ அவ்வளவாக இம்சிக்காமல் அப்படியே விட்டிருக்கின்றார்கள். ஒருவேளை சிம்ரன் ஏற்கனவே வயதான தோற்றம் தருகிறார் என்பதாலா என்னவோ தெரியவில்லை. ஆனால் சிம்ரனின் நடிப்பு நிறைவைத் தந்தது. சமீரா ரெட்டியும் நடிக்க முயற்சி செய்திருக்கின்றார் ஆனால் மொழி புரியாததால் என்னவோ அவரால் அவ்வளவு சிறப்பாக நடிக்க இயலவில்லை. ஒருசில காட்சிகளில் மட்டும் அற்புதமாக பொருந்துகின்றார். தங்கையாக வருபவர் ஞாபகத்தில் பதிய மறுக்கின்றார். தங்கையின் தோழியாக வரும் திவ்யா அழகு. அதுவும் அவர் தனது காதலை சொல்லும் இடம் அற்புதமான கவிதை. அதே சமயம் காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது. வருவது கொஞ்சம் நேரம் என்றாலும் நிறைவாக செய்திருக்கின்றார்.

இயக்குனரைப் பொறுத்தவரை கெளதம் மேனனுக்கு இது புதிது. அவரிடமிருந்து இப்படி ஒரு படத்தை நானும் எதிர்பார்க்கவேயில்லை. அருமையாக செய்திருக்கின்றார். ஒரு நிறைவான சேரன் படம் பார்த்த திருப்தி நிலவுகின்றது. அப்பா சூர்யா வரும் காலக்கட்டங்களில் பிரேமின் ஒவ்வொரு அங்குலத்தையும் அந்தக் காலக்கட்டங்களுக்கு ஏற்ப வடிவமைத்திருப்பது அருமை. அப்பாவிலிருந்து மகன் சூர்யா வரைக்குமான பல்வேறு காலமாற்றங்களை அற்புதமாக இயக்கியிருக்கின்றார். ஒளிப்பதிவு கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கினாலும் நன்றாக இருக்கின்றது. இசை படத்துடன் இணைந்திருப்பது அழகு. ஹாரிஸ் ஜெயராஜ் சில இடங்களில் வியக்க வைக்கின்றார். இருப்பினும் சில பாடல்கள் திணிக்கப்பட்டதுபோலிருக்கின்றது. பாடல்களை காட்சியாக்கியிருக்கும் விதம் அருமை. அமெரிக்காவையும் காஷ்மீரையும் இதுவரை இந்திய சினிமாக்களில் காண்பிக்காத வண்ணம் அழகாக காண்பித்திருப்பது அருமை. வசனங்கள் சில இடங்களில் மின்னுகின்றது.

கொஞ்சம் மேல்தட்டு வர்க்கம் என்று தோன்ற வைக்கும் அதிக ஆங்கில உச்சரிப்புகள் கொஞ்சம் நெருடலைக்கொடுத்தாலும் நடக்கும் நிகழ்வுகள் அதை மறக்கடிக்கின்றன. சாதாரணமாக ஒத்துக்கொள்ள முடியாத சில காட்சிகளும் உண்டு. ஆனால் அப்பாவும் மகனும் நண்பர்கள் என்று காண்பிப்பதற்காக இருவரும் ஒன்றாக உட்கார்ந்து பீர் அடிப்பது போல் காண்பிக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான அறிவுகெட்டத்தனம் இல்லாதது கொஞ்சம் ஆறுதல். காட்சிகள் தொடர்ச்சியாக இல்லாது ஒரு குறை போலிருந்தாலும் அப்பா மற்றும் மகனின் வாழ்க்கயின் பல்வேறு பதிவுகள் என்கிற வகையில் அவை கோர்வையாகத்தான் இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் பின்னால் எதனுடனோ தொடர்பு இருக்கின்றது. ஒரு சில அபத்தங்களும் இந்த படத்தை அபத்தத்தை தேடுபவர்களுக்கு பிடிக்காமல் செய்துவிடுகின்றன. எனக்கு என்னவோ இயக்குனர் சில அபத்தங்களை சுவாரசியம் கருதியே வைத்திருப்பது போலிருந்தது இல்லையென்றால் இவ்வளவு நீளப் படத்தை பார்ப்பதும் கடினம்தான். ஒரு உதாரணம் எல்லா தமிழ் படத்திலும் வரும் வகையில் ஒரே பாடலில் கதாநாயகன் சிறப்பான நிலைக்கு வந்து வீடெல்லாம் கட்டி முடிப்பது. ஆனால் அப்படி இல்லையென்றால் ஏற்கனவே நீளமான படத்தில் சூா்யா எப்படி எல்லாம் முன்னுக்கு வந்தார் என்பதை விரிவாகக் காட்டுதல் இன்னமும் நீட்டித்து போரடித்துவிட வைக்கும். ஒரு நாவலைப் படிப்பதுபோல்தான் இந்தப் படமும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கீழே வைத்தல் முடியாதது. அதுபோலவே இயல்பான காதலும் காமமும் கூட அசிங்கம் இல்லை என்றுதான் படம் உணர வைக்கின்றது. காமத்தையும் காதலாகத்தான் காட்டப்பட்டிருக்கின்றது. அப்பாவை இத்தனை வயதுக்குப் பிறகும் வா போ என்றும் பெயர் சொல்லியுமே பேசும் அம்மா தமிழ்சினிமாவுக்கு கொஞ்சம் புதியதுதான். அப்பா என்று அழைப்பதை விட டாடி என்றும் மாமா அத்தை என்பதை விட அங்கிள் ஆண்டி என்றும் அழைக்கும் பிள்ளைகளும் மருமகள்களும்கூட கொஞ்சம் நெருடல்கள்தான். இருப்பினும் இதன்மூலம் இயக்குநர் காண்பிக்க விழைவது என்ன என்பது அவ்வளவாக விளக்கப்படவில்லை.

இரசித்த தருணங்கள் மகிழ்ந்த தருணங்கள் அழுத தருணங்கள் எரிச்சல்பட்ட தருணங்கள் என்று இந்த மொத்த படமே எனக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போலத்தான் இருந்தது. இருப்பினும் ஒரு நிறைவான அனுபவத்தை வழங்க படம் தவறவில்லை. ஒருசில காட்சிகள் திரையரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் நினைவிலிருந்து நீங்க மறுத்தன.

சண்டைக் காட்சிகள் இயல்பாக இருந்தது ஆச்சரியம் அதுவும் கெளதம் மேனனின் படத்தில். டெல்லியில் பையனை கடத்திக்கொண்டு போன ரெளடிகளுடன் சூா்யா மோதும் இடம் இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு. கிளைமாக்ஸ் இராணுவ சண்டைக் காட்சி அற்புதம். என்ன நடக்குமோ என்று கொஞ்ச நேரம் சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிட்டார். படம் முழுவதுமே கொஞ்சம் சாப்டாக போவது சிலருக்கு சீக்கிரமே தூக்கத்தை வரவழைக்கலாம். ஆனால் எனக்கு அனுபவமாகவே இருந்தது. காதலி இறந்தபின் அப்பா அம்மாவிடம் போனில் அழுது அலறும் மகன் ‘We made love daddy’ என்று அங்கலாய்ப்பது தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதிது. அதுபோலவே காதலியாக ஏற்றுக்கொண்டதாக கூறிய மறுகணமே தங்கையின் தோழியுடன் படுக்கையில் விழும் காட்சிகளும் கொஞ்சம் நெருடலைக்கொடுத்தாலும் இயல்பான காதலாலான காமத்தைத்தான் அது காட்டுகின்றது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஒருவேளை முந்தைய காதலின் வடுக்களுக்கு இது தேவையான வடிகால் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளில் ஒரு சிலவற்றையாவது தங்கள் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்தப் படம் ஒரு சிறப்பான அனுபவம்.

எனக்கு அப்படியே…

Comments

தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!


பதிவை அச்செடு பதிவை அச்செடு

தமிழமுதம் சின்னம்

அன்பு நண்பர்களே,

மறுபடியும் ஒரு சந்தோஷமான விஷயம். எனது வலைத்தளத்தின் பெயரான http://www.tamilamirtham.org/ என்பது சரியான தமிழ் உச்சரிப்பாக இல்லையென்று நீங்களனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அமுதம் என்று வைக்கலாம் என்ற யோசனைக்குப் பிறகு கடைசியாக ஐயா தமிழ்த் தேனீ கூறியபடி தமிழமுதம் என்று வைப்பதென்று முடிவுசெய்து அந்த டொமைனை தேட அதுவும் அதிர்ஷ்டவசமாக யாரும் எடுக்காமல் இருந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். புதிய டொமைனை (வலைத்தள முகவரி) உருவாக்கி என் முழு தளத்தையும் புதிய முகவரிக்கு பதிவேற்றிவிட்டேன். இனிமேல் நண்பர்கள் http://www.tamilamirtham.org/ என்று மறந்து தட்டச்சிட்டாலும்கூட அது http://www.tamizhamutham.org/ என்கிற புதிய சரியான முகவரிக்கு செல்லும்படி திருப்பியனுப்பிவிட்டேன். கருத்தும் ஆலோசனையும் வழங்கிய உங்களனைவருக்கும் மிகவும் நன்றி…

http://www.tamizhamutham.org/

என்பதே இனி நமது தமிழமுதத்தின் முகவரி.

நன்றி…

Comments

தமிழ் அமிழ்தம் - இலக்கியங்களின் இணையத் தொகுப்பு…


பதிவை அச்செடு பதிவை அச்செடு

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் நானொரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

தமிழ் அமிழ்தம் என்கிற ஒரு புதிய வலைத்தளத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன்.

ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வலைத்தளங்கள் இருக்க, இப்படி ஒரு புதிய வலைத்தளம் ஏன் தேவைப்படுகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். மற்ற வலைத்தளங்கள் பொதுவாக செய்திகள், சினிமா, தொடர்கள், கதைகள் போன்றவற்றை வழங்குவனவாக இருக்கின்றன. ஆனால் தமிழ் அமிழ்தம் அப்படி இல்லை. இதன் முக்கியக் குறிக்கோளே தமிழின் இணையற்ற அமுது போன்ற இலக்கியங்களையும் பல்வேறு தனிப்பட்ட படைப்புகளையும் என்றும் அழியாவண்ணம் இணையத்திலேயே வைத்திருப்பதுதான். இதன் மூலம் பல அழியா இலக்கியங்கள் இணையத்தில் என்றும் வாழ்ந்திருக்கும் நம் தமிழ் மொழியின் பெருமையை இன்னும் வரும் பல்வேறு தலைமுறைகளுக்கும் அளிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த தமிழ் அமிழ்தம் வலைத்தளம் தற்போது எனது சொந்த நிறுவனமான ஈஷா தொழில்நுட்பங்கள் நிறுவனத்தின் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்யப்பட்டு வந்தாலும், வெகு விரைவில் தமிழ் அமிழ்தத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட அறக்கட்டளையை உருவாக்கி அறக்கட்டளையில் இணைந்த பெரியோர்களே இந்த வலைத்தளத்தை மேலாண்மை செய்யும் வகையில் அமைக்க இருக்கின்றேன். இதன் மூலம் எனது நிறுவனம் அழிந்தாலும் தமிழ் அமிழ்தம் என்றும் அழியாமல் இருக்கும்.

தற்போது கீழ்க்கண்ட வசதிகளை தமிழ் அமிழ்தம் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது:

  • இலவச உறுப்பினர் கணக்கு
  • உறுப்பினர் விவரம் (படங்களுடன்)
  • உறுப்பினர் வலைப்பூக்கள்
  • பக்கங்கள்
  • புத்தகங்கள்
  • இழைகள்
  • விவாதங்கள்
  • உறுப்பினர் படங்கள் (புகைப்பட வரிசையுடன்)
  • மின்தாள்கள் (ePapers)
  • வினா - விடைகள்
  • கருத்து ஓட்டுப் பெட்டிகள்
  • ஆதாரச் சான்றுகள்
  • உடனடி செய்திச் சேவை (RSS)

இன்னும் பலவித வசதிகள் விரைவில் தமிழ் அமிழ்தத்தில் உறுப்பினர்களுக்கும் விருந்தினர்களுக்கும் வழங்கப்படும்…

உங்களில் எவரேனும் புதிய வசதிகளை ஏற்படுத்தும்படி யோசனை கொடுத்தாலும் அதை அறிமுகப்படுத்த நான் முயல்வேன். தயவு செய்து உங்களின் மேலான கருத்துக்களை வழங்குவதோடு மட்டுமின்றி இன்றே தமிழ் அமிழ்தத்தில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

உங்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று திறந்த அட்டை (OpenID) முறையையும் இந்த வலைத்தளத்தில் ஏற்படுத்தியிருப்பதால் நீங்கள் ஏற்கனவே இந்த ஓப்பன் ஐடியை உபயோகிப்பவராக இருந்தால் எளிதில் இணைந்துவிடலாம். இல்லையென்றாலும் புதிதாக இணைவது மிகவும் எளிதான விஷயமே.

நீங்களனைவரும் உங்களின் படைப்புகளில் பொது மக்களுக்கு என்னென்ன கொடுக்க விரும்புகின்றீர்களோ அவை அத்தனையையும் தமிழ் அமிழ்தத்தில் வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றே செல்வீர்: தமிழ் அமிழ்தம் - http://www.tamilamirtham.org/

Comments

கோவை பதிவர் சந்திப்பு - ஓரு நேரடிப் பார்வை…


பதிவை அச்செடு பதிவை அச்செடு

கோவை சந்திப்பு வருகிற 13ம் தேதி நிகழ இருக்கின்றது என்று மஞ்சூரண்ணன் சொன்னதிலிருந்தே முதன்முறையாக இத்தகைய சந்திப்புகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு அடக்கமுடியாமலிருந்தது. கோவையில் மூன்று வருடங்கள் வேலை செய்ததில் எனக்கு கிடைத்திருந்த நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியதென்பதால் தங்குவதைப் பற்றி கவலைப்படாமல் புகைவண்டிக்கு டிக்கெட்டும் எடுத்துவிட்டபின்தான் யோசித்தேன். எங்கே நடக்கிறது கோவையில்???? இருக்கிற எல்லா மின்னஞ்சல்களையும் அலசி ஆராய்ந்ததில் சென்னை சந்திப்பு இடம் மட்டுமே கொடுக்கப்பட்டு கோவை சந்திப்புக்கான இடம் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவசர அவசரமாக மஞ்சூரண்னன் என்னிடம் பேசியிருந்த அரட்டையை பார்த்தால் அதிலும் அவர் கோவை வந்தபின் எண் கொடுக்கின்றேன் என்று கூறியிருந்தும் இன்னமும் எண் கொடுக்கப்படவில்லையென்பதை உணர்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஆபத்பாந்தனாக நம்ம வேந்தர் ஐயா அரட்டையில் வந்தார். உடனே அவரிடம் பிரச்சினையைக் கூறி அலைபேசி எண் கேட்க அவரும் மஞ்சூரண்ணனின் எண் கொடுத்துவிட்டு தொடர்புகொள்ளுங்கள் என்றார். தொடர்பு கொண்டால் அந்த எண்ணுக்கு அழைப்புகளே போகவில்லை. அதைக்கேட்ட அவர் மறுபடியும் தமிழ்பயணி சிவாவின் (சிவக்குமார்) அலைபேசி எண்ணைக் கொடுத்து முயன்றுபாருங்கள் என்று கூற நானும் அவசரத்தில் 98 என்று ஆரம்பித்த எண்ணில் 93 என்று ஆரம்பித்து அழைத்துவிட ஒரு பெண் எடுத்து ராங் நம்பர் என்று முகத்திலடித்தாற்போல கூறிவிட்டு வைத்துவிட்டார். ஒருவேளை அவருடைய மனைவி யாரேனும் எடுத்து கடுப்பில் பேசுகின்றார்களோ என்றுதான் முதலில் நினைத்தேன். :)))

இதென்னடா வம்பாபோச்சு என்று மறுபடியும் வேந்தரை அணுகினால் அவருக்கோ மிகவும் குழப்பம் இந்த எண்தானே கொடுத்தார் என்று அவருடனான அரட்டையை எனக்கு வழங்கினார் அதில் எண் பார்த்தபின்தான் நான் செய்த தவறு தெரிய வேந்தரிடம் விளக்கிவிட்டு எண்ணை சரிசெய்து அழைத்தால் இரண்டு மணியிலேயே எடுத்துவிட்டார் சிவா. விவரத்தைக் கூற அவரோ உடனே முகவரியை வழங்கி வாருங்கள் வந்து கலந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நிம்மதியுடன் கோவைக்குப் பயணமான எனக்கு அங்கு சேர்ந்த இரண்டு மணி நேரத்திலேயே அலுவலகத்திலிருந்து அழைப்பு. மாலைக்குள் வந்து ஒரு அமெரிக்க வாடிக்கையாளரிடம் பேச வேண்டும் என்று. சரி, மதியத்திற்குள் சந்திப்புக்கு போய் ஒரு மணிநேரமாவது கலந்துகொள்ளுவோம் என்று ஆர்வமிகுதியில் என் பால்யகாலத்து நண்பர் திரு. விநோத் குமார் (இவர் பதிவர் இல்லை) அழைத்துக்கொண்டு எனது நிக்கான் கேமராவையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.கொடுக்கப்பட்ட அட்ரஸ் விசாரித்து செல்ல மிகவும் குழப்பமாகிவிட்டது. ஒரு ஆட்டோக்காரர் தவறான வழியை கொடுத்துவிட சிவாவைத் தொடர்பு கொண்டேன். சாந்தி மெடிக்கல்ஸ் எதிரிலேயே இருக்கிற ரோட்டில் வந்தால் சாமியானா போட்ட மாடி தெரிகிற வீடு என்றார். சரியென்று வைத்தபின்தான், சாந்தி மெடிக்கல்ஸ் எங்கே என்று தேட ஆரம்பித்து இன்னொரு ஆட்டோக்காரரை அணுக, அவர் பொறுமையுடன் தங்கம் தங்கம் என்று என்னை அழைத்துக்கொண்டே வழி கூறியது (கோவை மனிதர்களின் மரியாதையே மரியாதை) இதமாக இருந்தது. கடைசியில் வீட்டைக் கண்டுபிடித்து பைக்கை பார்க் செய்துவிட்டு பார்த்தால் கேட் மூடிக்கிடக்கிறது. மறுபடியும் சிவாவிற்கு அடிக்க அலைபேசியை எடுத்தால் ஏற்கனவே ஐயா மிஸ்டு கால் கொடுத்திருந்தார். அழைத்த உடனே மாடிப்படியில் தலைகாட்டிய முகத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. சிவாவா??? மாடியில் ஏறி வாங்கன்னு சொல்ல கேட்டைத் திறந்து பார்த்தபின்தான் அது பூட்டியிருக்கவில்லை என்பது என் சிறு புத்திக்குப் புரிந்தது. மேலே ஏறி வந்து பார்த்தால் ஏகப்பட்ட முகங்கள். மஞ்சூர் அண்ணன் மட்டும் சொல்லாமலேயே தெரிந்துவிட்டது. உத்வேகமாக பேசிக்கொண்டிருந்த வா. சுப்பையா (வாத்தியார் சுப்பையா) ஐயா அவர்களை கொஞ்சம் நிறுத்திவிட்டு என்னைப் பற்றிய அறிமுகம் கொடுத்தார் அண்ணன். அப்புறம் சஞ்சய் வந்து என்னுடன் கைகுலுக்கிக்கொண்டார். என்னடா இந்தப் பெயர்களெல்லாம் முத்தமிழிலேயே இல்லையே என்று யோசித்தப்பின்தான் தெரிந்தது சந்திப்புக்கு வந்திருந்ததில் பெரும்பாலானோர் தமிழ் மணம் குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பது. அடடா அந்தக் குழுவில் நான் இன்னமும் இணையவில்லையா என்று யோசித்து முதலில் இணைந்துவிடுவது என்று முடிவெடுத்தப்பின் உட்கார்ந்தேன். சட்டென்று வந்து வடையையும் குடிக்க குளிர்பானத்தையும் (மிராண்டான்னு நினைக்கின்றேன்) கொடுத்தார் மஞ்சூர் அண்ணன்.  காலையிலேயே தாமதமாக சாப்பிட்டது நினைவுக்கு வர, குளிர்பானத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அப்படியே நண்பர் பக்கம் தள்ளிவிட்டேன். சுப்பையா அவர்கள் தீவிரமாக பேசிக்கொண்டிருந்ததை காதுகொடுத்து கேட்க ஆரம்பிக்க சிவா சுத்திச்சுத்தி வந்து புகைப்படங்களாக சுட்டுத்தள்ளுவதையும், சஞ்சயும் மற்றவர்களும் வீடியோக்களும் புகைப்படங்களுமாக அலைவதையும் பார்த்தபின்தான் நான் கேமரா கொண்டுவந்திருந்தது ஞாபகத்திற்கு வர, சிவாவை அழைத்து எனக்காக புகைப்படங்கள் எடுக்க சொல்ல, முகம் சுளிக்காமல் அன்போடு எடுத்துக்கொண்டு சென்று எல்லாரையும் சுற்றிச் சுற்றி எடுத்தவர் என்னிடம் வந்து கொடுத்துவிட்டு இதுல நானிருக்க மாட்டேன் நீங்க எடுங்க என்றபின் அவரையும் சஞ்சையையும் வைத்து ஒரு படம் எடுத்தேன் (கொஞ்சம் டார்க்காக வந்துவிட்டது மன்னிக்கவும்). அப்புறம் என் நண்பர் விநோத் குமார் எடுத்துக்கொண்டு வலம் வந்தார்.

இந்த அமளி துமளியில் கால்வாசி கேட்டதில் வாத்தியார் சுப்பையா ஐயா என்ன சொல்கின்றார் என்பதையே என்னால் முழுவதும் கவனித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் நீண்ட உரைக்குப்பின் விடைபெற்று போய்விட்டார். அதன்பின் இளைய தலைகள் நிறைய உள்ளே நுழைய ஆரம்பிக்க மஞ்சூரண்ணனை பார்த்து அறிமுகம் செய்துவிட்டு உரைகளை தொடங்கலாமே என்ற கேள்வியுடன் நான் பார்த்துக்கொண்டிருக்க என்னைப் பார்க்காத அவருக்கு எப்படியோ அதே எண்ணமே தோன்றி அறிமுகம் செய்துவிட்டு உரைகளை ஆரம்பிக்கலாம் என்று அறிவிக்க எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன்பின் ஒருவர்பின் ஒருவராக எல்லாரும் அறிமுகம் செய்துகொண்டார்கள். சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் விவரம் (சிவாவின் வலைப்பூவிலிருந்து சுட்டது):

அதன்பின் ஒவ்வொருவராக உரையை ஆரம்பிக்க முதலில் பேசிய ஞானவெட்டியான் ஐயா என் கருத்தை மிகவும் கவர்ந்தார். நான் யோசித்த பல விஷயங்களை அவர் யோசித்தது மட்டுமின்றி அற்புதமாக தன் வாழ்க்கையையே அதற்கு அர்ப்பணித்திருந்தது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அவருடைய உரையில் பல நூல்கள் செத்துப்போவதைப் பற்றி பேசி அதைப் பற்றியெல்லாம் தாம் எழுதுவதாகவும் அற்புதமான வலைப்பூக்களை வைத்திருப்பதாகவும் சொல்ல அப்படிப்பட்ட வலைப்பூக்களும் செத்துவிடக்கூடாது என்று எனக்கு ஏற்பட்ட ஆசையில் ஐயாவின் மூச்சு வாங்கும் நேரம் நான் பேசி இடை வெட்டினேன். இருப்பினும் முகம் சுளிக்காமல் எனது கருத்துக்களை ஆழ்ந்து கேட்ட ஐயா, தனக்கு அவ்வளவாக தொழில்நுட்ப அறிவு இல்லாததால் செல்வாவையும் சிவாவையுமே நம்பி இருப்பதாக கூற, என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்னாலியன்ற உதவிகளை செய்கின்றேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய தமிழ் அமிழ்தம் (http://www.tamilamirtham.org/) விக்கிபீடியா முயற்சியைப் பற்றிக்கூற அதை ஆர்வத்துடன் கேட்டார் ஐயா. செல்வா தான் ஏற்கனவே விக்கிபீடியாவில் ஐந்து வருடம் அனுபவம் பெற்றிருப்பதாகவும் அதில் அனைவரும் மாற்றும் முறையை தவறாக உபயோகிப்பதையும் தமது கருத்துக்கள் வீணடிக்கப்படுவதோடு மட்டுமின்றி எடுத்ததெற்கெல்லாம் தமிழ்நாட்டைப் பற்றி அறியாதவர்கள் வந்து அவர் எழுதிய பதிவுகளை முடக்கிவிடுவதையும் குறிப்பிட்டார். அதற்குபதிலாக இந்த விக்கிபீடியாவை அவர்களைப் போன்றோர் நிர்வாகிக்காமல் நாமே நிர்வாகிக்கலாம் என்று நான் கூறியதில் கொஞ்சம் சமாதனமடைந்தார். உரை தொடர்ந்துகொண்டிருக்க இடையில் தியாகுவும் வந்து ஜோதியில் ஐக்கியமானார். அவருடைய அறிமுகத்திற்குப் பிறகு தடையில்லாமல் பேசி முடித்த ஐயாவின உரைக்குப் பிறகு நேரம் பார்த்த எனக்கு 2 மணிக்கு ரயில் டிக்கெட் மாற்றிவிட்டது ஞாபகம் வர, செல்ல வேண்டும் என்பதை சங்கடத்துடன் கூற மஞ்சூர் அண்ணா சட்டென்று லதானந்த் பேசி முடிக்கட்டும் போகலாம் என்று கூறிவிட சட்டென்று அமர்ந்துவிட்டேன்.

லதானந்த் தான் எவ்வளவு ஒரு திறந்த மனிதர் என்பதை எடுத்த எடுப்பிலேயே நிரூபித்துவிட்டார். போகப்போக அவருடைய பேச்சு முறையும் எதையும் திறந்த மனதுடன் பேசுவதும் அலசுவதும் சமுதாயத்தின் மேல் எந்த அக்கறையும் எனக்கில்லை பொழுதுபோக்குக்காகத்தான் எழுதுகின்றேன் என்றதும், நானொரு அரசாங்க ஊழியன், ஒரு அரசாங்க ஊழியன் எப்படியெல்லாம் இருப்பான் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அத்தனைக்கும் நான் பொருந்துவேன் என்றதும் ஆச்சரியமாக இருந்தது. சமுதாயத்தை ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்தும் கவலையெல்லாம் தமக்கு இல்லை என்று சொன்னவர் தான் இயற்றிய சில படைப்புகளைப் பற்றி கூறியபோது அவருக்கிருந்த சமுதாய அக்கறையை மறைமுகமாக கூறிவிட்டார். அவரையும் அவருடைய மீசையையும் எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்து என்னை உரையாற்ற சொல்லி மஞ்சூரண்ணா கேட்க திகைத்துப்போய்விட்டேன். நானாவது உரையாற்றுவதாவது? எனக்கு அதெல்லாம் பழக்கமில்லண்ணா, என்று நான் அசடு வழிய சும்மா பேசுங்க என்று அவர் ஊக்கமளிக்க கூட சஞ்சய் மற்றும் சிவாவும் சேர்ந்துகொள்ள வேறு வழியின்றி என் உரையை உரையெல்லாம் இதுவரை நான் கொடுத்ததேயில்லை என்பதில் ஆரம்பித்து, முத்தமிழ் எப்படி என்னை கூகிள் குழுமங்களின் பக்கமும் தமிழின் பக்கமும் திருப்பியது என்பதை தொட்டு நான் முயன்றுகொண்டிருக்கும் தமிழ் அமிழ்தம் சேவை பற்றிய விவரங்களையும் கூறிக்கொண்டிருந்த நேரத்தில் வடகரை வேலன் ஒரு கேள்வி கேட்டார். நான் தொழில்நுட்பம் பற்றி பேசுவதால் கேட்பதாக கூறிய அவர், .TK இலவச டொமைன் சேவை பற்றி கேட்க ஏற்கனவே அதில் பல மோசமான அனுபவங்களை பெற்றிருந்த நான் அதை விளக்க சட்டென்று உள்நுழைந்த செல்வா, நானும் தொழில்நுட்பவாதிதான் ஆனால் நீங்கள் கூறிய மாதிரியெல்லா நாமே டொமைனை ஹோஸ்ட் செய்தால் ஆகாது என்று விவாதிக்க அதற்கு பதிலுறுக்க நான் பெயர் வழங்கு கணினிகளைப் பற்றி ஆரம்பிக்க கடைசியில் முடிந்த விவாதத்தில் அனைவருமே இத்தகைய இலவச சேவைகளை நாம் நம்பக்கூடாது என்பது வரை ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உரை முடிந்ததும் கிளம்ப எழுந்த நான் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்க, சாப்பிட்டுவிட்டு போங்கள் என்று அன்புக் கட்டளை இட்ட மஞ்சூரண்ணனிடம் என் நிலையை விளக்கி நான் மன்றாடிய எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பத்தாதென்று என்னுடன் சேர்ந்து பரிசல்காரன், வெயிலான், கார்த்திக், கிரி போன்றோரும் எழுந்திருக்க மஞ்சூர் அண்ணா இதெல்லாம் உங்களால்தான் என்று கூற வேறு வழியே இல்லாமல் போயிற்று. திரும்ப உட்கார்ந்த என்னிடம் வலைப்பூ முகவரியையும் தொடர்பு கொள்ளும் விவரங்களையும் பரிசல்காரணும், கார்திக்கும், லதானந்த் மற்றும் ஞானவெட்டியான் ஐயாவும் கேட்க அடடா ஆச்சரியமா இருக்கே என்று அகமகிழ்ந்து வழங்கிக்கொண்டிருந்தபோது சாப்பாடு வந்துவிட்டது. சரி, சாப்பிட முடியாவிடினும் பார்சல் எடுத்துக்கொள்கின்றேன் என்றபோதுதான் அதுவும் சாத்தியமாகும் வழியறியாமல் சாப்பிட்டுட்டே போங்க என்று தியாகு, நம்பிக்கை பாண்டியன் போன்றோரும் சேர்ந்து வற்புறுத்த வேறு வழியின்றி அவசரஅவசரமாக சாப்பிட மேஜைகளை அமைத்து சாப்பிட அமர்ந்தோம் அனைவரும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நம்பிக்கை பாண்டியன் நான் எழுதும் இழைகளை படிப்பேன் என்று கூறியதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தியாகுவும் எங்களுடன் கலந்துகொள்ள அரட்டையுடன் சூடான தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர்சாதம், வடை என்று அமர்க்களமாக சாப்பாடு இறங்கியது. உண்மையிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்ட நான் கூறியதை கடைசி வரை மஞ்சூரண்ணா நம்பவில்லை. சாப்பிடும்போது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சிவா அவர்களிடம் மறுபடியும் என் கேமராவைக் கொடுத்ததில் சில புகைப்படங்கள் சிக்கின. ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு நான் கிளம்ப ஆரம்பித்து அனைவருடனும் அன்புடன் விடைபெற்றுக்கொண்டு கீழிறங்கி பைக்கில் ஏறியபோது மனம் முழுவதும் நிறைந்திருந்தது. கண்டிப்பாக சென்னை சந்திப்புக்கும் போவது என்று அப்போதே முடிவெடுத்துக்கொண்டேன். இது ஒரு இனிய அனுபவம். வீட்டில் வந்து புகைப்படங்களை அலசியபோதுதான் நண்பர் விநோத் குமார் மஞ்சூரண்ணா வீட்டு மாடியிலிருந்த பூக்களைக்கூட அழகாக படம்பிடித்திருந்தது தெரிந்தது. மொத்தமாக பிக்காஸாவில் இட்டு உங்களுக்காக கீழே இணைப்பும் கொடுத்துள்ளேன்.

இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து தன்னுடைய வீட்டு மாடியிலேயே அமைத்து துணைவியார் மற்றும் துணைவியாரின் சகோதரி சகிதம் எல்லா ஏற்பாடுகளுடன் அருமையான சாப்பாட்டையும் வழங்கிய மஞ்சூர் அண்ணாவிற்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். சிவாவும் சஞ்சையும் உழைத்த உழைப்பில் நிறைய அன்பு தெரிந்தது. எல்லாருடைய பெயரும் அவ்வளவாக என் நினைவில் வரமாட்டேன் என்கிறது. இருப்பினும் சந்திப்பு ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்ததில் எனக்கு மிகவும் திருப்தி. சென்னை சந்திப்பிலாவது முழுநேரமும் கலந்துகொள்ள முயலவேண்டும் என்று ஆசை கிளம்பிவிட்டது. அனைவருக்கும் நன்றி… நன்றி… நன்றி…

கோவை சந்திப்பில் என் கேமரா சுட்ட நிகழ்வுகள்: http://picasaweb.google.co.uk/sripauljoseph/MuththamizhKovai

Comments

கடவுள்-2048


பதிவை அச்செடு பதிவை அச்செடு
இந்தப் பதிவு ஸ்ரீயின் சிறுகதைகள் தொடரின் 2 பதிவுகளில் 2-ம் பதிவு

25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே? துக்கம் தொண்டையை அடைக்க அதைத் திறக்க உள்ளே விட்ட ஆல்கஹாலின் அளவு அதிகமானதில் இப்போது உலகமே சுற்றுகிறது. ஆமாம் இது என்ன இடம், திடீரென்னு வெள்ளை வெளேரென்று? ஒருவேளை நண்பன் கூறியது போலவே இறந்து சொர்க்கம் வந்துவிட்டேனா? அன்பு மனைவி உமா இங்கே இருக்கின்றாளா?

ஹலோ மிஸ்டர் ஈஷ்வர். வெல்கம் டூ 2048!

2048 ? யார் நீங்கள்? என்ன சொல்கின்றீர்கள்? இது என்ன இடம்?

மிஸ்டர் ஈஷ்வர் இது 2048ம் வருஷம், நீங்கள் இருந்த 2008ம் வருஷத்திலிருந்து கால இயந்திரத்தின் உதவியால் இந்த வருஷத்திற்கு ஒரு முக்கியமான சேவை வேண்டி அழைத்துவரப் பட்டிருக்கின்றீர்கள். என் பெயர் சந்திரபிரகாஷ். நான் இந்த இந்திய விஞ்ஞான நிறுவனத்தின் மேலாளர்.

அட, 40 வருஷம் கழிச்சு வந்துட்டேனா? சரிதான். என்ன சேவை அது?

உங்களுக்கு விளக்கமாக சொல்கின்றேன். கொஞ்சம் எழுந்து இங்கே சுற்றிலும் பார்க்கின்றீர்களா?

எழுந்து சுற்றிலும் பார்த்த ஈஷ்வருக்கு மறுபடியும் தலை சுற்றியது. இன்னமும் போதை தெளியவில்லை. வெள்ளை வெளேரென்று இருந்த அந்த வட்ட வடிவ கட்டிடத்தின் ஒரு மூலையிலிருந்த ஆய்வுக்கூடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். சுற்றிலும் அவனால் புரிந்துகொள்ள முடியாத அறிவியலில் மிகவும் முன்னேறிய கருவிகள் தெரிந்தன. அறைக்கு நேரெதிரில் ஒரு ஆய்வுக்கூடம் தெரிய அதிலிருந்த பெட்டகமும் பக்கத்திலிருந்த மனிதனைப் போல தோற்றமளித்த ஒரு இயந்திரமும் தெரிந்தது.

நீங்க பார்த்த அந்த பெட்டகம் உங்களுடையதுதான். அதற்குப் பக்கத்திலிருக்கும் கடவுள்-2048 இயந்திரமும் உங்களின் கண்டுபிடிப்புத்தான். இதுவெல்லாம் நீங்கள் உங்களின் 65-வது வயதில் சாதித்த விஷயங்கள். இருப்பினும் எதிர்பாராத விதமாக நீங்கள் தற்கொலை செய்துகொண்டீர்கள். அது ஏன் என்று எங்களுக்குத் தெரியாது. அதே சமயம் உங்களின் ஆய்வு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவனங்களை அந்தப் பெட்டகத்தில் வைத்து அதற்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கும் நுழைவுச்சொல்லையும் வைத்துவிட்டீர்கள். என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் இறந்த மனிதர்களை உயிர்பிக்கும் வழியை நாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் கால இயந்திரத்தின் மூலம் உங்களை இங்கு வரவழைத்தோம். எங்களுக்கு அந்த நுழைவுச்சொல்லை நீங்கள் வழங்க வேண்டும். இந்த இயந்திரத்தைப் பற்றிய குறிப்புகளும் ஏன் அந்த ஆவணங்கள் முக்கியம் என்ற விவரங்களும் இந்தக் கோப்பில் இருக்கின்றது படித்துவிட்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நுழைவுச்சொல்லைக் கண்டுபிடித்தவுடன் இங்கே இருக்கும் பட்டனை அழுத்தினால் நாங்கள் வந்து உங்களை மீண்டும் 2008-ம் வருஷத்திற்கே அனுப்பிவிடுவோம்.

தலையும் காலும் புரியாவிட்டாலும் வேறு வழியின்றி அதை வாங்கிக்கொண்ட ஈஷ்வர் அதன் மேல் பார்வையை செலுத்த சந்திரபிரகாஷ் சென்றுவிட்டார். குறிப்புகளைப் படிக்க படிக்க போதை முழுவதும் தெளிந்துவிட்டது ஈஷ்வருக்கு. உண்மையிலேயே இது 2048ம் வருஷம்தான். இல்லையென்றால் 2008-ல் இதுபோன்றவை சாத்தியமில்லை. படித்தவற்றின் சாராம்சம் அவன் மனதில் ஓடியது.

2008-ம் ஆண்டில் ஒரு குண்டு வெடிப்பில் தன் காதல் மனைவியை இழந்த ஈஷ்வர் வேறு கல்யாணம் செய்துகொள்ளாமல் தன்னை நாட்டின் பாதுகாப்புக்கு அற்பணித்துக்கொள்ள, இனிவரும் வருஷங்களில் முளைவிடும் எந்தத் தீவிரவாதச் சக்தியையும் முறியடிக்கும் ஒரு வலிமையான இயந்திரத்தை தயாரிக்க மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய அறுபத்தியைந்தாவது வயதில் கண்டுபிடித்ததுதான் கடவுள்-2048 இயந்திரம். இந்த இயந்திரத்தின் சக்தி மனிதர்களுக்கு அப்பாற்பட்டது. இதனால் எந்த உருவத்தையும் எடுத்துக்கொள்ள முடியும், இல்லை முழுவதும் கண்ணிலிருந்து மறைந்துவிடவும் முடியும். எந்தவிதமான படையையும் தனியாளாய் தோற்கடிக்கும் வல்லமை பெற்ற ஆயுதங்களை தன் உடலில் கொண்டது. எந்தவிதமான குறுகிய இடத்திற்குள்ளும் நுழையுமளவிற்கு உடலை குறுக்கிக்கொள்ளவும் சக்திவாய்ந்த கேட்டறியும் மற்றும் படம்பிடிப்பு கருவிகளையும் இயக்க வல்லது. மற்றவர்களிடம் மாட்டிக்கொண்டால் தன்னுடைய தொழில்நுட்பத்தை அவர்கள் அறியாத வண்ணம் சட்டென்று தன்னுடைய இதயப்பகுதியிலிக்கும் சக்திவாய்ந்த சிறிய அணுகுண்டால் 10 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பை தூள்தூளாக்கிவிட்டு அழித்துக்கொள்ள வல்லது. ஆனால் இதன் மூளைப்பகுதியாக இயங்க வேண்டிய செயற்கை மூளைத்திறன் (Artificial Intelligence) மட்டும் இன்னமும் முழுவதுமாக முடியவில்லை. அதை முடித்துவிட்டாரோ என்னவோ என்று அறியாத வண்ணம் அதற்குள் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

நாட்டின் பாதுகாப்பு பற்றிய இந்த விஷயத்திற்கு கண்டிப்பாக தான் உதவ வேண்டும் என்று முடிவெடுத்த ஈஷ்வர் உடனே தான் நுழைவுச்சொல்லை வடிவமைக்கும் முறையை மனதில் இறுத்தினான். அவன் இன்று இருந்தால் எந்த நுழைவுச்சொல்லை வைப்பான் என்று யோசித்ததில் மூளையில் பல்பு எரிய சட்டென்று எழுந்துசென்று பெட்டகத்தை நெருங்கி உம்முக்குட்டி2008 (அவனுக்கு மட்டுமே தெரிந்த காதல் மனைவியின் செல்லப்பெயரும் அவனால் மறக்க இயலாத வருஷமும்) என்று தட்டச்சிட பெட்டகம் திறந்தது. கையில் முதலில் அகப்பட்ட ஆய்வுக்குறிப்புகளுக்கு மேல் ஒரு டைரி இருந்தது. அதை எடுத்து கடைசி பக்கங்களை ஆராய்ந்த ஈஷ்வருக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தான் தயாரித்த கடவுள்-2048 இயந்திரத்தின் செயற்கை மூளைத்திறன் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அதனுடைய மூளைத்திறனால் ஏற்படப்போகும் அழிவுத்திறனும் அதை தவறான வழிகளில் பயன்படுத்த சந்திரபிரகாஷ் முயலுவதையும் அறிந்த ஈஷ்வர் அந்த இயந்திரத்தையும் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் முழுவதும் அழித்துவிட முயன்ற இரவுதான் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்துவிட்டார். ஆனால் அந்தத் தற்கொலையைப் பற்றிய எந்தக் குறிப்பும் டைரியில் இல்லை. உண்மையில் தற்கொலை செய்துகொள்வதென்றால் முழுவதையும் அழிக்காமல் செய்ய வாய்ப்பேயில்லை.

பலவாறாக சிந்தித்த ஈஷ்வர் கடைசியில் ஒரு முடிவெடுத்து மொத்த ஆவணங்களையும் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு இயந்திரத்தை அணுகினான்.

….

இதில் நீங்கள் எதிர்பார்த்த 2000 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் இருக்கின்றன மிஸ்டர் சந்திரபிரகாஷ். இன்று எங்களுக்கு கடவுள்-2048 கிடைக்க வேண்டும்.

கண்டிப்பாக கிடைத்துவிடும். அது கிடைக்க வேண்டுமென்றுதானே, முழுவதும் தயாராகிவிட்டது என்று சொல்லிய ஈஷ்வரின் சொல்லை நம்பி அவரைக் கொலை செய்து தற்கொலை போல செய்தேன். ஆனால் அவர் இன்னமும் செயற்கை மூளைத்திறனை அமைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது போயிற்று. ஆனால் அவரின் முந்தியகாலத்திலிருந்து கொண்டு வந்திருக்கும் இந்த ஈஷ்வர் எப்படியும் நுழைவுச்சொல்லை கண்டுபிடித்துவிடுவான். அப்புறம் அந்தக் குறிப்புகள் கிடைத்துவிட்டால் செயற்கை மூளைத்திறனை பொருத்திவிடலாம். வாருங்கள் அடுத்த அறையிலிருக்கும் திரையில் ஆய்வுக்கூடத்தில் நடப்பதை பார்வையிடலாம்.

அடுத்த அறைக்குள் நுழைந்த அமெரிக்கனும் சந்திரபிரகாஷும் அங்கே திரையில் ஈஷ்வர் பெட்டகத்தை திறந்து எல்லா ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு கடவுள்-2048 இயந்திரத்தை அணுகுவதைப் பார்த்து சந்தோஷத்தில் மூழ்கினர்.

….

ஆய்வுக்கூடத்தின் பக்கவாட்டுச் சுவற்றினருகே வந்த சலீம் தன்னுடைய முதுகுப்பையிலிருந்த சிறு கருவியை எடுத்து இயக்க சுவற்றில் மறைந்திருந்த ஒரு திறப்பு திறந்து வழிவிட்டது.

ஆகா, எவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்டது இன்று சாத்தியமாகப்போகின்றது! கடவுள்-2048 கண்டிப்பாக நம் அல்லாஹ் ஜிஹாத் தீவிரவாதக் குழுவிற்கு பயன்படப்போகின்றது. நினைத்தாலே சிரிப்புதான் வருகின்றது. தீவிரவாதத்தை அழிக்கும் கடவுள் தீவிரவாதிகளிடமே சேரப்போகின்றான். ஆஹா, தோழர்கள் பூரித்துப்போவார்கள்.

கதவைத்திறந்து உள்ளே நுழைந்த சலீம் கண்ணெதிரில் விரிந்த காட்சியைப் பார்த்து திகைத்துவிட்டான். யாரிந்த இளைஞன்? ஈஷ்வரைப் போலவே இருக்கின்றானே? அவருடைய மகனாயிருப்பானோ? இல்லையே அவர் மனைவி இறந்தபின் யாரையும் கல்யாணம் செய்துகொள்ளவில்லையே? ஆமாம், கல்யாணம் செய்தால்தான் குழந்தையா? இன்றைக்கு இருக்கும் விஞ்ஞானத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளாமலேயே குழந்தையை உருவாக்கும் வித்தைகள் வந்துவிட்டதே. ஈஷ்வர் அப்படி இவனை உருவாக்கியிருப்பாரா? அட, நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கிய ஆவணங்கள் அனைத்தும் அவன் கைகளிலிருக்கின்றதே? ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? ஆஹா, அல்லாஹ் எங்களை கைவிடவில்லை.

அந்த இளைஞனை நோக்கி சலீம் சிறுக சிறுக முன்னேறினான்.

….

அமைதியாகத் தெரிந்த இந்திய விஞ்ஞான நிறுவனத்தின் வட்டவடிவ கட்டிடத்தை சுற்றி காவலுக்கு இருந்த காவலர்கள் திடீரென்று மயக்கமாகி விழ காவல் இயந்திரங்கள் செயலற்று நின்றன. இருட்டிலிருந்து திடீரென்று உதயமானார்கள் 12 பேர் கொண்ட அந்தக் குழுவினர். அவர்களின் தலைவன் போல தெரிந்தவனின் வாய் மெதுவாக அசைய மற்றவர்களின் காதுகளுக்குள் கண்ணுக்குத் தெரியாமலிருந்த சின்னஞ்சிறிய கருவியில் அவன் குரல் தெளிவாக விழுந்தது.

பாகிஸ்தான் ஜிந்தாபாத். தோழர்களே இன்றைய நாள் நம் சரித்திரத்தின் ஒரு முக்கிய நாள். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே நமக்கு அடிமையாக்கும் சக்திவாய்ந்த கடவுள்-2048 இயந்திரமும் அதுபோன்ற இயந்திரங்களடங்கிய ஒரு படையையே உருவாக்க உதவும் குறிப்புகளும் நமக்கு கிடைக்கப் போகின்றன. திட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதுதானே?

11 பேரும் ஒரே குரலில் ஞாபகம் இருக்கின்றது என்று கூற, திருப்தியை முகத்தில் தழுவவிட்ட முகம்மது கான் மறுபடியும் தன் உதடுகளை மெதுவாக அசைத்தான்.

பெட்டகத்தை திறக்கும் நுழைவுச்சொல்லை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் நம்மிடமுள்ள சக்திவாய்ந்த இந்த கருவியினால் பெட்டகத்தையே உடைக்க வேண்டும். உள்ளிருக்கும் காகிதங்கள் எதுவும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் அழிந்துவிடாமல் இந்தக் கருவி பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு உள்ளேயிருக்கும் கடவுள்-2048 ஐ வெளியே கொண்டு வருவதுதான். நான் ஆவணங்களை கொண்டு வருகின்றேன். யார் எதிரில் வந்தாலும் தடுக்க முயன்றாலும் உடனே இந்தத் துப்பாக்கியை இயக்கினால் அவர்கள் பஸ்பமாகிவிடுவார்கள். புறப்படுவோம், பாகிஸ்தான் ஜிந்தாபாத்!

பக்கவாட்டுச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த முகம்மது கான் உள்ளே தெரிந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ஈஷ்வரைப் போலவே இருக்கும் இந்த இளைஞன் யார்? அது யார் மற்றொரு பக்கத்திலிருந்து அந்த இளைஞனை நோக்கி வருவது? அவன் வருவதைப் பார்த்தால் கடவுள்-2048 ஐ திருட வந்தவன் போலிருக்கின்றதே? ஈஷ்வர் இறந்துவிட்டதால் அந்த இளைஞன் நமக்கு பயன்படுவானே. இவன் போகும் வேகத்தைப் பார்த்தால் அவனைக் கொன்றுவிடுவான் போலிருக்கின்றது. உடனே அதை தடுக்க வேண்டும்.

முகம்மது கானின் இடுப்பிலிருந்த சத்தமிடாத லேசர் துப்பாக்கியை நோக்கி கைகள் சென்றன.

….

இயந்திரத்தை அணுகிய ஈஷ்வர் மெலிதாக தனக்குள் புன்னகைத்துக்கொண்டான். வந்தே மாதரம்! இயந்திரத்தின் மார்பிலிருந்த ஒரு சூட்சும பொத்தானை அவன் அழுத்த மார்புக்கூடு திறந்துகொள்ள அதனுள்ளிருந்த ஒரு விசையை நோக்கி கைகளை கொண்டு சென்றான்.

அதே சமயம்…

திரையில் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த சந்திரபிரகாஷும் அமெரிக்கனும் அதிர்ச்சியடைய, நடக்க இருக்கும் ஆபத்தைக் கண்ட சலீம் வேகமாக ஓடிவர, சலீமைக் குறிவைத்துக்கொண்டிருந்த முகம்மது கான் கைகளை தழைத்துக்கொண்டு ஈஷ்வரை நோக்கி ஓடிவர, எதையும் கவனிக்காத ஈஷ்வர் அந்த விசையை அழுத்த அவனைத்தவிர மற்றவர் அனைவரும் ஒரே நேரத்தில் அலறினார்கள், நோ……

இயந்திரத்தின் வீரியமிக்க அணுகுண்டின் வெடிப்பில் 10 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பும் இந்திய விஞ்ஞான நிறுவனமும் தூள்தூளாகின.

….

எத்தனை முறை கூறியும் கேட்காமல் அதிகம் குடித்துவிட்டதில் மயங்கி விழுந்துவிட்ட ஈஷ்வரின் மூச்சை சோதித்துப் பார்த்த சிவா அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.

காதல் மனைவி இறந்துவிட்டாள் என்று அவளுடன் உடன் கட்டை ஏறிவிட்டாயா நண்பா?????

சிவாவின் தொண்டையிலிருந்து இரவைக்கிழித்துக்கொண்டு புறப்பட்ட அலறலில் அந்த சுற்றுப்புறமே அதிர்ந்தது.

(வலைப்பதிவாளர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கொஞ்சம் பெரிய சிறுகதை)

Comments

மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஆறு


பதிவை அச்செடு பதிவை அச்செடு
இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 7 பதிவுகளில் 7-ம் பதிவு

பிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…

சிவசங்கரின் தொலைபேசி அழைப்பை ஏற்று விரைந்து வந்த நந்தினி